Wednesday, March 25, 2009

பெட்ரோலும் தண்ணீரும்


"பூமியின் இதயத்துடிப்பு" பதிவில் பெட்ரோலை கொஞ்சமாக பற்ற வைத்தேன். சரியாய் எரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் "சற்றும் மனம் தளரா..." மீண்டும் திரி கொளுத்துகிறேன். இது கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயம் .

தண்ணீருக்காக நம்மூர்ல நடக்கிற கூத்துகளுக்கு அளவே இல்லை அதை பற்றி விவரிக்கவும் தேவை இல்லை. தண்ணி லாரி முதல் காவேரி வரை நாம் அடித்து கொள்வது தண்ணீருக்காக. ஆனால் கோடிகணக்கில் செலவு செய்து தண்ணீரை பூமிக்கடியில் கொண்டு செல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக இது நிலத்தடி நீர் சேகரிப்பு அல்ல. வேறு எதுக்காக? எல்லாம் ஒரு விஷயமாத்தான்..கீழ படிங்க ...

பெட்ரோல் பூமிக்கடியில் இருந்து கிடைக்கிறதென்பது நாம் அறிந்த ஒன்று. இப்படி பூமிக்கடியில் இருக்கும் பெட்ரோல் சில வகையான பாறைகளின் நுண் துளைகளில் காணப்படும். பொதுவாக பெட்ரோல் ஒளிந்திருக்கும் பாறைகளுக்கு மேலாக இருக்கும் பாறைகள் கடினமானதாக இருக்கும். எவ்வளவு கடினம் என்றால் அதிக அழுத்தத்தில் இருக்கும் பெட்ரோல் அதன் இருப்பிடத்தை விட்டு மேலே சென்று மற்ற பாறைகளோடு ஐக்யமாகால் இருக்குமளவுக்கு கடினமானதாக இருக்கும். இந்த அடுக்கை துளைத்து நாம் பெட்ரோல் இருக்கும் பாறையை அடைந்தால்தான் வாழ்க்கை முழுவதும் அதிக அழுத்தத்தில் இருந்த பெட்ரோல் அழுத்தம் குறைந்த பூமியின் மேற்பரப்பை நோக்கி சீறி வரும்(தன் வாழ்கை எரிந்து முடிய போகின்றது என்று தெரியாமலே).

அழுத்தம் என்ற பௌதீக சமாசாரம் இங்கு முக்கியம். திரவங்களும் வாயுவும் அழுத்தம் கூடிய பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்த பகுதிக்கு பாய வேண்டும் என்பது நியதி. பூமியில் ஆழம் கூடும்போது அழுத்தமும் கூடும் அதனால் தான் பெட்ரோல் நாம் துழைத்த உடனே ஓடி மேலே வருகிறது. இதே காரணத்தால்தான் தான் இருக்கும் பகுதியிலிருந்து கீழேயும் போவதில்லை. பூமிக்கு கீழே பெட்ரோலுக்கு நண்பர்கள் தண்ணீரும் இயற்கை வாயும்தான். அடர்த்தி சமாச்சாரங்களால் பெட்ரோல் தண்ணீருக்கு மேலேதான் இருக்கும் இயற்கை வாயு அங்கு இருக்கும் பட்சத்தில் அது பெட்ரோலுக்கு மேலே இருக்கும். அப்பாடா கிட்டத்தட்ட கிட்ட வந்துட்டேன்.

இனியொரு சமாசாரம் ஒரு பெட்ரோல் வயலில் மொத்தமாக இருக்கும் பெட்ரோலில் 30% வெளியே எடுக்க முடியும். ஏனென்றால் நாம் பெட்ரோல் எடுக்க எடுக்க பூமிக்கடியில் பெட்ரோல் மீதான அழுத்தம் குறைந்து வரும், இதனால் உற்பத்தியும் குறைந்து வரும். இங்குதான் நாம தண்ணி காட்றோம். ஆமா வேறொரு குழாய் மூலமாக பெட்ரோல் வயலின் வேறொரு இடத்தில் பூமியின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் அதிக அழுத்ததில் உட்செலுத்தப்படும். இந்த தண்ணீர் கீழே சென்று பெட்ரோலை மேல் நோக்கி தள்ள "ஆப்பு ஏல ஐலசா" ஸ்டைலில் பெட்ரோல் மேலே ஏறி வரும். இது பெட்ரோலுக்கு ஊடு கொடுப்பது மட்டுமல்ல பெட்ரோல் காலி செய்த இடத்தை அடைத்து கொண்டு வெற்றிடம் உருவாகாமலும் அதனால் பெட்ரோல் வயலுக்கு சேதாரம் இல்லாமலும் பார்த்துக்கொள்ளும்.


ஏதோ ஒரு ரஷ்ய மூலையில் உதித்த இந்த ஐடியாவால் இன்று 30% மேலாக பெட்ரோலை எடுக்க முடிகிறது. இப்படியாக பூமியுடனும் நாம் பண்ட மாற்று செய்ய வேண்டி இருக்கிறது.

டிஸ்கி:
1. இங்கு பெட்ரோல் என்று குறிப்பிட்டது ஒட்டுமொத்த பெட்ரோலியத்தை குறிக்கும்.
2. உட்செலுத்தப்படும் தண்ணீர் குடிநீர் அல்ல.

10 comments:

  1. நல்ல பதிவு

    தொடருங்கள்
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஏலேய் நல்லாதாவேய் போடுறீக

    ReplyDelete
  3. பதிவு மிகவும் அருமை.

    தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!!

    ReplyDelete
  4. விளக்கமான பதிலுக்கு நன்றி.
    மறுபடியும் சந்தேகம்....
    இப்படி மேலிருக்கும் தண்ணீரை கீழே செலுத்தி சிறை பிடிப்பதால் கடல் நீர் மட்டம் குறையுமா? அல்லது இப்படி செலுத்துவது மிகச்சிறிய அளவா?உலகம் முழுவதும் ஓடும் காரை பார்த்தால் அது சாப்பிடும் பெட்ரோல் அளவு கொஞ்சமாக இருக்கும் என்று தோனவில்லை.கார் மட்டுமில்லாமல் பெட்ரோல் உபயோகிக்கும் பல இயந்திரங்களின் பங்கு அதிகமாக இருக்கிற இந்த காலகட்டத்தில் மொத்த கொள்ளலவு கனிசமாக இருக்குமே!!

    ReplyDelete
  5. போன கேள்வி கொஞ்சம் கிருக்குத்தனமாக இருந்தாலும் இந்த சாதாரன மனிதன் சந்தேகத்துக்கும் பதில் சொல்லுங்க.
    ஏண்டா? இந்த சப்ஜெக்டில் பதிவு போட்டோம் என்று யோசிக்கிறீர்களா? :-)
    Too Late.

    ReplyDelete
  6. அனைவரின் வருகைக்கும் நன்றி.
    வடுவூர் குமார் ..
    நான் இது சாதாரண மக்கள் புரிந்து கொள்ளத்தான் எழுதுகிறேன்..அவ்வகையில் உங்கள் கேள்விகள் சிறப்பாகவே உள்ளன.. உங்கள் கேள்வியை கொஞ்சம் மாற்றி உங்களிடமே கேக்கிறேன்... எவ்வளவோ ஆறுகள் ஏகப்பட்ட தண்ணீரை கடலுக்கு கொண்டு வருகிறதே..என்னிக்காவது கடல் மட்டம் கூடியிருக்குதா? கடல் கொள்ளளவு மிக மிக அதிகம் ...அதனால் நாம் சிறை பிடிக்கும் தண்ணீரின் அளவு கணக்கில் வைத்துக்கொள்ளாது... உங்கள் இரண்டாவது கேள்வி இன்று உலகை ஆட்டிப்படைக்கும் கேள்விதான்.. ஆமாம் நமது எரிபொருள் கையிருப்பு நமக்கு பத்தாது..அதனால் நம்மூரில் மாட்டுவண்டி நம்ம பேரனோடே பேரன் காலத்துல திரும்பி வரலாம்..

    ReplyDelete
  7. சரி,நதி நீரால் கடல் மட்டம் ஏறவில்லை என்று வைத்துக்கொள்வோம்,அப்படி இருக்க அண்டார்டிகா பனி கரைந்தால் மட்டும் கடல் மட்டம் ஏறும் என்று சொல்வது எந்த விதத்தில் ஞாயம்?இது விஞ்ஞானிகளால் சொல்லப்படும் சரியான விளக்கமா?
    இப்படி ஒரு சமநிலையை இயற்கையே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதா? அப்படி என்றால் அந்த சமன்பாட்டுக்கு ஏதாவது வரைமுறை அல்லது அளவு கோள் இருக்கா?

    ReplyDelete
  8. சூப்பர்.. சுவாரசியமா, எளிமையா தமிழ் படுத்தி எழுதுறீங்க.. எந்து துறையில் என்ன வகையான படிப்பு இத்துறைகளில் ஈடுபட உதவும் ?!

    ReplyDelete
  9. குமார்.. வருகைக்கும் நல்ல கேள்விகளுக்கும் நன்றி...
    கடல் மட்டம் உயர்வு என்பது ஒரு நீண்ட நெடிய செயல்பாடு.. (வருடங்கள் கோடியில் கணக்கிடப்படும்) அவ்வகையில் அன்டார்டிக பனி உருகுவது கடல்மட்டம் கூட வழி செய்யும் என்பது உண்மையே ... ஆனால் அதன் பங்களிப்பு மிக குறைவாக இருக்கும் (0.1mm/year) ஒட்டுமொத்த அண்டார்டிகாவும் உருகினால் கிட்டத்தட்ட 70 மீட்டர் வரை கடல் மட்டம் உயரலாம் ஆனால் அது நடக்க எவ்வளவோ கோடி வருடங்கள் ஆகலாம் . இப்பொழுது தொழில் நிமித்தமாக ஓடிக்கொண்டிருக்கிறேன் .. நேரம் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் தெளிவாக பதிவிடுகிறேன் .. தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறேன் .
    யாத்த்ரீகன்..
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    பூமியியல் அல்லது பௌதீக பூமயியல் (Geology and Geophysics) பட்டம் மற்றும் பட்டமேட்படிப்புகள் படிப்பவர்களுக்கு இத்துறையில் வாய்ப்புகள் உள்ளன.

    ReplyDelete
  10. இன்னம் உங்க கிட்ட எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete